search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமூர்த்தி அணை"

    • 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது.

     உடுமலை : 

    உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இதன் வாயிலாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுக்கள் உரிய இடைவெளி விட்டு டிசம்பர் 24 வரை 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்டு, மூன்றாம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.பாசனத்தின் கீழுள்ள அனைத்து கால்வாய்களுக்கும் படிப்படியாக நீர் வழங்கப்பட்டு கடந்த 13-ந் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    பி.ஏ.பி., பாசனத்தில் திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்பட்டு காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து திட்ட தொகுப்பு அணைகள் மட்டுமின்றி பாசன பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இறுதிச்சுற்றுக்கு நீர் திறப்பு தள்ளிப்போனது.திருமூர்த்தி அணையிலும், மொத்தமுள்ள 60 அடியில் 52 அடி வரை நீர்மட்டம் உயர்ந்த நிலையில் திருமூர்த்தி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து பாலாறு, தோணியாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் திருமூர்த்தி அணை நிரம்பி வீணாக உபரி நீர் திறப்பதை தவிர்க்க திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து கடந்த 16ந்தேதி, காண்டூர் கால்வாயில் நீர் பெறுவது நிறுத்தப்பட்டது. பாலாறு வழியாக மட்டும் நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை.

    திருமூர்த்தி அணையில் தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில், 52.83 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,627.75 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு பாலாறு வழியாக வினாடிக்கு, 51 கனஅடி நீர்வரத்தும் 21 கனஅடி நீர் குடிநீருக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

    இறுதிச்சுற்று திறப்புக்கான இடைவெளி அதிகரித்த நிலையில், பருவமழையும் குறைந்துள்ளதால் வருகிற 25-ந் தேதி முதல் இரண்டாம் மண்டலம் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    இரண்டாம் மண்டல பாசனத்தில் 3 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்ட நிலையில், மழை பொழிவு அதிகரித்ததால் நீர் திறப்பு தாமதமானது. மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கதிர் பிடிக்கும் பருவத்திற்கு நீர் தேவை என்றதால் இடைவெளி அதிகரிக்கப்பட்டு வருகிற 25-ந் தேதி முதல் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்கப்படுகிறது.

    தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது. காண்டூர் கால்வாய் விடுபட்ட பகுதிகளில் பராமரிப்பு மற்றும் பிரதான கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதனால் குறைந்த நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு பிரதான கால்வாய் பராமரிப்பு மடை மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கி 120 நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது. மூன்றாம் மண்டல பாசனம் நிறைவடைந்ததும் கால்வாய் பணிகள் துவங்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரம்பிக்குளம்-ஆழியாறு(பி.ஏ.பி.,) பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் எடுத்து செல்ல 930 கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பி.ஏ.பி., விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் டெண்டர் அறிவிக்கப்பட்டதும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    தி.மு.க., தவிர மற்ற அனைத்து கட்சியினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒட்டன்சத்திரத்துக்கு ஏற்கனவே காவிரியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழக-கேரளா ஒப்பந்தத்தில் செயல்படும் பி.ஏ.பி., திட்டமான ஆழியாறில் இருந்து தண்ணீர் எடுத்தால், இரு மாநில ஒப்பந்தத்தையும் பாதிக்கும் என அதிகாரிகள் மட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது.

    ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் அரசு மட்டத்தில் மறுபரிசீலனையில் இருப்பதால் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மதுரை தலைமை பொறியாளர் முருகேசன் அறிவித்துள்ளார். இதையடுத்து ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து பி.ஏ.பி., திட்ட பாலாறு படுகை திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள செய்தியை அனைத்து பாசன சங்க தலைவர்களுக்கும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி என்றார்.

    • அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு சர்க்கார் பதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக 43 கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இதன் மூலம் அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு மேல் பகுதியில் திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும் .பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை யின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஓடும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    • நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண்னை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர்.

    உடுமலை :

    விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    எடுக்கப்படும் வண்டல் மண்விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு மற்றும் புஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு மண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உடுமலை தாலுகாவில் 9 குளம், குட்டைகளில், விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் திருமூர்த்தி அணையிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று நிலத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 18 முதல் திருமூர்த்தி அணையிலிருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வந்தது.

    தற்போது வரை 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருவதால் மண் எடுக்கும் அனுமதி நிறைவு செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், அணையின் நீர் தேங்கும் பரப்பில் மேடான பகுதியிலிருந்து 24 ஆயிரம் கனமீட்டர் மண் விவசாயிகள் எடுத்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் மண் எடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது என்றனர்.

    • 120 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
    • 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை 120 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு 4 சுற்றுக்களாக மொத்தம் 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

    • 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள நீரை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன வசதிக்கு ஏதுவாக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.மேலும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, மடத்துக்குளம் பூலாங்கிணறு, குடிமங்கலம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவில்லை. அதன் பின்னர் பணிகள் முடிந்த நிலையில் கடந்த வாரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் கொடுத்த கோரிக்கையின் பேரில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசிடமிருந்து உத்தரவு வந்த பின்பு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருவதாலும் இந்த மாத இறுதிக்குள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தை உழுது சாகுபடி பணிகளுக்கு தயாராகி வருகின்றனர். 60 அடி உயரம் கொண்ட அணையில் தற்போதைய நிலவரப்படி 42.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 893 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 26 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
    • காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் நடந்தது.

    இதில் பாசன சபை தலைவர்கள் பேசுகையில், பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் 26ந் தேதி முதல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டும்.வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். சுற்று எண்ணிக்கையை குறைத்தால் நாட்கள் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் தண்ணீர் வழங்க சாத்தியம் உள்ளதா என ஆலோசிக்க வேண்டும்.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு சுற்று எண்ணிக்கை குறைக்க காண்டூர் கால்வாய் பணிகள் தான் காரணமா அல்லது உபரியாக நீர் வீணாக சென்றதால் குறைத்து வழங்கப்படுகிறதா என விளக்கமளிக்க வேண்டும்.கடந்தாண்டை போன்று எத்தனை சுற்று தண்ணீர் வழங்கலாம். இவ்வளவு எடுக்கிறோம், எத்தனை நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். சமமான நீர் பங்கீடு வழங்க வேண்டும். நீர் வழங்குவது குறித்து அட்டவணை அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் கூறுகையில்,காண்டூர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 5 சுற்றுக்கு பதிலாக 4 சுற்று தண்ணீர் வழங்கலாம். அதன் பின் உரிய இடைவெளி கிடைப்பதால் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் கோரிக்கையின் படி, வரும் 26ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.காண்டூர் கால்வாய் பணிகள் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுற்று எண்ணிக்கை குறைக்க கேட்டோம். வாட்டர் பட்ஜெட் போட்டதும் எவ்வளவு மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், வரும் 26ந் தேதி தண்ணீர் திறக்க பாசன சபை தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு ஒரு சுற்று குறைத்து தலா 4 சுற்று வீதம் தண்ணீர் வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிகாரிகள் பேசுகையில், மொத்தம் 72 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாய் பணிகளை முடிக்க, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.அதற்கு பாசன சபை தலைவர்கள், நல்லாறு பகுதியில் மேற்கொண்ட பணிகள் முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணிகளை, ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டால் பாசனம் பாதிக்காது. இது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    • குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • வண்டல் மண்ணை கொட்டி விவசாயிகளின் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுகிறது. 60 அடி உயரம் உடைய திருமூர்த்தி அணையின் மூலம் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன. மேலும் உடுமலை நகராட்சி பூலாங்கிணறு ,கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் அணையை தூர்வாரி கூடுதல் நீரை சேமிக்கும் வகையிலும் விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி ,பெருமாள் கரடு, கோனக்கரடு பகுதியில் இருந்து விவசாயிகளிடம் இருந்து அணை கட்ட கையகப்படுத்தப்பட்ட சுமார் 300 ஏக்கர் பரப்பளவு நிலம் வீணாக உள்ளது. எனவே விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிப்பதோடு அணையை தூர்வார நிதியை ஒதுக்கி கிழக்குப் பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள 300 ஏக்கர் நிலத்தையும் ஆழப்படுத்த வேண்டும் .மேலும் நீர் தேங்கும் பரப்பில் உள்ள மண்மேடான பகுதிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை ஏற்று அணையில் தூர்வாரி வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதற்கு அனுமதி பெற பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட கலெக்டர் விதித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர் . விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கான உத்தரவு தபாலில் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார் . இதையடுத்து அணையில் தூர்வாரும் பணி தொடங்கியது .பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு டிப்பர் லாரியில் வண்டல் மண்ணை கொட்டி விவசாயிகளின் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் பரம்பிக்குளம் சோலையார் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர்வரத்து இல்லை.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் கடைசி அணையாக இது உள்ளது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஏராளமான கூட்டுக் குடிநீர் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து பொள்ளாச்சி சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இது தவிர பாலாறு மூலமும் தண்ணீர் வருகிறது. ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை தான் பி.ஏ.பி., அணைகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்குரிய தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை. அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் பரம்பிக்குளம் சோலையார் உள்ளிட்ட அணைகளுக்குபோதுமான நீர்வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் மெதுவாக தான் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் அணையின் நீர்மட்டம் 28.67 அடியாக குறைந்துள்ளது. பாலாறு மூலம் வெறும் 8 கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. குடிநீர் மற்றும் பிற தேவைக்காக 27 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திருமூர்த்தி அணையில் 41.85 அடி நீர்மட்டம் இருந்தது. தற்போது கால்வாய் பராமரிப்பு பணி முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது.

    • பொள்ளாச்சியில் 27-ந் தேதி நடக்கிறது
    • விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி,

    ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி பொள்ளாச்சியில் வருகி 27-ந் தேதி 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிஏபி திட்டக்குழுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    பிஏபி திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த திட்டத்திற்கு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நேற்றுமுன்தினம் ஆழியாறு அணை விவசாயிகள் பொள்ளாச்சியில் 1500-க்கும் அதிகமானோர் பங்கேற்று ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்நிலையில், திருமூர்த்தி அணை பாசன சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோச னைக்கூட்டம் நெகமத் தில் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. இந்த ஆலோச னை கூட் டத்தில் திருமூர்த்தி அணை பாசன சங்கங் களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆழியாறு அணை யிலிருந்து ஒட ்டன்சத் திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட அரசுக ்கோரிக்கை வைத்து வருகிற 27-ந் தேதி பொள் ளாச்சியில் ஆர்ப ்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப் பட்டது.

    இது குறித்து பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரம சிவம் கூறு கையில், வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் பாலாறு படுகையை சேர்ந்த திருமூர்த்தி அணை பாசன நீரை பயன்படுத்தும் 25 ஆயிரம் விவ சாயிகள் பங்கேற்க உள்ளோம் என்றார். 

    பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    உடுமலை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாக கொண்டு  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமூர்த்திஅணை கட்டப்பட்டு உள்ளது. அணையின் உயிர் நாடியாக பி.ஏ.பி. அணைகள் விளங்கி வருகிறது.

    இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.

    பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம் பாளையம்,மடத்துக்குளம், குமரலிங்கம்,  பூலாங்கினர் குடி மங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருமூர்த்தி அணையின் முக்கிய  நீராதமான பாலாறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக பாலாற்றில் தொடர்ந்து  நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.

    மேலும்  அணைக்கு காண்டூர் கால்வாய் மற்றும் பாலாறு மூலமாக வினாடிக்கு 1141 கன அடி அளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.இதனால் 60 அடி உயரமுள்ள அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து 57 அடியை கடந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாலாற்றில் வினாடிக்கு 901 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.வினாடிக்கு  1141 தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பாலாற்றின் கரையோர பகுதி  பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். திருமூர்த்தி அணையில் இருந்து  உபரி நீர் வெளியேற்றப்படும் பாலாறு, பொள்ளாச்சி தாலுகா கிராமங்கள் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறது.

    எனவே அங்குள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை  அறிவிப்பு  தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாதுகாப்பு காரணங்களுக்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்திமலையில்  கடந்த சில நாட்களாக  பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மலைத்தொடரில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  பஞ்சலிங்க அருவி  ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்றுமுன்தினம் மலை அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில் மலைத்தொடரில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தளி போலீசார், சாம்பல் மேடு பகுதியில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து திருமூர்த்திமலைக்கு செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    கோவில் பகுதியில் இந்து அறநிலையத்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.நேற்று  மழை இல்லாத நிலையில்  சிற்றாறுகளில், அதிக நீர் வரத்து காரணமாக பஞ்சலிங்க அருவியில்  வழக்கத்தை விட கூடுதலாக நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.தற்போதைய நிலவரப்படி, திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 979 கன அடி நீர் வரத்து உள்ளது.

    அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 
    கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் நகருக்கும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணையின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் இருந்து வரும் தண்ணீரும் அணையில் கலக்கிறது.

    கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது. அதிக நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 55.03 அடியாக உயர்ந்தது.

    பாலாறு பகுதியில் 795 கன அடியும், காண்டூர் கால்வாய் மூலம் 784 கன அடியும் நீர்வரத்து உள்ளது. பிரதான கால்வாயில் 146 கன அடியும், உடுமலை கால்வாயில் 150 கன அடியும், குடிநீருக்காக 21 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    திருமூர்த்தி அணை பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வருவதால் ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமூர்த்தி நகர் உதவி செயற்பொறியாளர் காஞ்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமூர்த்தி அணையின் முழு கொள்ளளவான 55அடிக்கு மேல் நீர்மட்டம் உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் வேகமாக நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனை வேகமாக நிரம்பி வரும் நிலையில் எந்த நேரத்திலும் உபரி நீர் வெளியேற்றப்படும்.

    எனவே பாலாறு கரையோரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
    ×